கஜல் ஓர் அறிமுகம்.
‘கஜல்’ அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.
‘கஜல்’ என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள். கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை. ‘கஜல்’ இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
– அப்துல் ரகுமான்.
அப்துல் ரகுமான், கஜல் எனும் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். ஆனால்,உருதுவில் ‘மிர்சாகாலிப்’ தான். கஜல் என்றாலே அதில் ‘மிர்சாகாலிப்’பின் வாசம் வீசும்.’ என்கிற அளவுக்கு அதில் அவர் சிறந்த கவிஞர். அவரின் கஜல் ஒன்று…
காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு
வினோதமான நெருப்பு!
பற்றவைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது!
– மிர்சாகாலிப்
அப்துல் ரகுமானின் கஜல் துளிகள் சில…
நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்*******
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?*********
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.*******
மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது************
என் கனவு
உன்முன் ஏந்திய
பிச்சை பாத்திரம்*******
உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னைப் பார்த்தேன்.– அப்துல் ரகுமான்.