கவிக்கோ பிறந்த நாள் விழா 13.11.2020

நோன்பு

அருளின் தேவதை

ஆண்டுக்கொருமுறை

கால வீதியில்

காலெடுத்து வைக்கின்றாள் –

சாந்தியின் தூதாக !

அவள்தான் ரமழான் !

அவள் புன்னகையில்

ஆயிரம் பூர்ணிமைகள் !

கண்களிலே

கருணைச் சுடர்கள் !

அவள்

நான்கு வேதங்களை

ஈன்றளித்த

புனிதத்தாய் !

பாவக் கறைகளை

அவள்

பரிவோடு துடைக்கின்றாள் !

நரகக் கூண்டுகளில்

அடைபட்ட பறவைகளை

விடுதலை செய்கின்றாள் !

பிறைச் சுடர் கொண்டு

அக அகல்களில் எல்லாம்

ஆன்மீக வெளிச்சம்

ஏற்றி வைக்கின்றாள் !

பசியென்ற அமுதம்

பரிமாறிப் பூமியையே

சொர்க்கமாய் ஆக்குகிறாள் !

பணத்தைப் பகிர்ந்து கொள்ள

ஏழைவரி !

பசியைப் பகிர்ந்து கொள்ள

உண்ணா நோன்பு !

எதுவுமே தேவையற்ற

இறைவன்

நோன்பை மட்டும்

தனக்கென்று கேட்கின்றான் !

தருவதற்கு

கொடுத்து வைக்க வேண்டாமா ?

அடடா !

எத்தகைய பெருமை !

இறைவனே நம்முன்

இரக்கின்ற ஏழை !

கொடை வள்ளல்

நாமெல்லாம் !

வேலைக்கே கூலியுண்டு !

ஓய்வுக்கு யார் தருவார் ?

ஆனால்-

வயிற்றின் இந்த ஓய்வுக்கு

வல்லோன் இறைவன்

தன்னையே சம்பளமாய்த்

தந்து விடுகின்றான் !

உபவாசம் இருப்போரின்

வாய் வாசம் இறைவனுக்கு

கஸ்தூரி வாசம் !

இதுதான் அவன்

ஆலயத்தின்

நறுமணத் தூபம் !

இல்லாமல் பசிக்கின்ற

ஏழையரின் துயருணர

இருப்பவனைப்

பசிக்க வைக்கும்

இணையற்ற

தத்துவமே நோன்பு !

அங்க ரதத்தை

அங்கிங்கே அலைகழிக்கும்

ஐந்து குதிரைகளை

அடக்கும் கடிவாளமிது !

மனிதன்

ஆசைகளின் எடுபிடியாய்

ஆடாமல் அவைகளைத்

தன்

எவலராய் மாற்றும்

அதிகார வலிமையிது !

உதிர வீதிகளில்

உலா வரும் சாத்தானும்

சிந்தை நடுங்கும்

சிகப்பு விளக்கு இது !

சொர்க்க வாசல்களைத்

திறக்கின்ற சாவியிது !

நரக வாசல்களையோ

அடைத்து விடும் பூட்டும் இது !

ஆன்மாவுக்கு இது

கூட்டுப் புழு பருவம் !

ஞான மலர்தேடி

தேனெடுக்க உதவுகின்ற

வண்ணச் சிறகுகள்

வளர்வது இதிலேதான் !

பருகாமல் உண்ணாமல்

பட்டினி கிடந்து விட்டால்

நோன்பாகி விடாது !

ஐம்பொறியும் உறுதியுடன்

அனுஷ்டிக்கும் விரதமிது !

புறம்பேசல் என்னும்

இறந்த சகோதரனின்

இறைச்சி உண்ணும்

அநாகரீகம்

நடத்தாமல் இருப்பதே

நாவின் நோன்பு !

அழுகிய வார்த்தைகளை

அருந்தாமல் இருப்பதே

செவியின் நோன்பு !

ஆபாசம் கண்டால்

அருவெருப்பதே

கண்ணின் நோன்பு !

ஆசைகள் பரிமாறும்

அறுசுவை விருந்தை

மறுப்பதே

மனத்தின் நோன்பு !

இந்த உலகத்தின்

இன்பங்கள் என்ன

அந்தக்

கதிர்நிலவைக்

கொண்டுவந்து

கைகளிலே கொடுத்தாலும்

சொர்கத்தின் எல்லா

சுகங்களையும் கொண்டுவந்து

காலடியில் வைத்தாலும்

இறைவா ! உன்

அன்பின் முன் இவையெல்லாம்

தூசு என்று

எட்டி உதைக்கின்ற

ஏற்றத்தைப் பெற்றுவிட்டால்

அதுதான்

ஆன்மாவின் நோன்பு !

இந்தப் பக்குவம்

எய்திவிட்டால்

பின்

உறக்கமும்

வணக்கமாகிவிடும் !

சுவாசமே தஸ் பீஹு

ஆகிவிடும் !

பிரார்த்தனை பிறகு

தேவை இல்லை –

தனியாக !

ஏனென்றால்-

நாமே

பிரார்த்திக்கப்படும்

பொருளாய் ஆகிவிடுகிறோம் !

கவிக்கோ அப்துல் ரகுமான்

நன்றி : சிராஜ் 1983 -ஜூலை )

பஹ்ரைன் தமிழ் சங்கத்தில் கவிக்கோ உரையாற்றியபோது

kavikko 11

 

kavikko 1

கவிக்கோ நினைவேந்தல் – பஹ்ரைன்

Poster

பொன்னான வரிகள்

கோயில் மூடியிருக்கிறது
உண்டியல் வாய் திறந்திருக்கிறது
#கவிக்கோ

கவிக்கோ நினைவேந்தல் நெகிழ்வுகள்…

 

 

தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும், இலக்கிய ஆளுமைகளும் சென்னை காமராஜர் அரங்கின் மேடையை தன்வசமாக்கிக்கொண்ட நிகழ்வு அது. இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட கவிக்கோ அப்துல் ரகுமானின் நினைவேந்தல் நிகழ்ச்சி, புதிய விதையாக அரங்கேறியுள்ளது. இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சி. இலக்கிய நண்பர்கள் ஓர் அமர்விலும், அரசியல் நண்பர்கள் இன்னோர் அமர்விலும் பேசினார்கள். கவிக்கோவுடனான சுவாரஸ்ய அனுபவங்கள், அவரது ஆசைகள், கோபங்கள், ஆற்றல்கள் என வந்திருந்த அனைவரும் அவரைப்பற்றிய தருணங்களை சிலாகித்தனர்.

முதல் அமர்வில், கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், அறிவுமதி, பழனிபாரதி மற்றும் இயக்குநர் லிங்குசாமி, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் மைக் பிடித்து, கவிக்கோ பற்றிய நினைவுகளை பகிர்ந்தபோது அரங்கம் அதிர்ந்தது. அரசியல் அமர்வில், தோழர் நல்லகண்ணு, வைகோ, கி.வீரமணி, துரைமுருகன், திருமாவளவன், திருநாவுக்கரசர், கவிஞர் வைரமுத்து, பேரா.அருணன், காதர் மொய்தீன் என பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.

விழாவுக்கு தாமதமாக வந்த துரைமுருகன், அமர்ந்திருந்த அனைவருக்கும் கைகுலுக்கிக்கொண்டே வந்தார். சின்ன சிரிப்புடன் வைகோ கைகொடுக்க, வைகோவை இழுத்துக் கட்டிப்பிடித்தார் துரைமுருகன். இதை சற்றும் எதிர்பார்க்காத வைகோ குஷியாகிவிட்டார். துரைமுருகன் வந்தபோது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசிக்கொண்டிருந்தார். அவர் முடித்ததும் வைகோ பேசவிருந்தார். ஆனால், துரைமுருகன் பேச அழைக்கப்பட்டதும், “லேட்டா வந்து சீக்கிரம் பேசுறீங்களே…” என்று கமெண்ட் செய்து அரங்கத்தை கலகலப்பூட்டினார் வைகோ.

அரசியல் அமர்வில் மொத்தக் கூட்டத்தையும் தன் பேச்சால் வசப்படுத்தினார் வைகோ. எந்தவிதமான குறிப்பும் இல்லாமல் அவர் பகிர்ந்த ஒவ்வொரு விஷயங்களையும், கவிக்கோ நேரில் இருந்து பார்த்திருக்க வேண்டும். “மரபுக் கவிதைகளை தாண்டி புதுக்கவிதைகளைத் தந்தவர் கவிக்கோ. என்னை பலநேரங்களில் ஊக்குவித்தவர். புகாரி ஓட்டலில் ஒருமுறை அவருடன் சாப்பிட்டுக் கொண்டே பேசியபோது, தியாகராசர் கல்லூரிக்கு அவர் பெரியாரை அழைத்து வந்தது, பேராசிரியராக அவர் பணியாற்றிய காலம், அறிஞர் அண்ணாவைச் சந்தித்த சம்பவம், அண்ணன் கலைஞருடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு என கவிக்கோ பகிர்ந்ததை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறேன்.

தமிழுக்கு அபாயங்கள் சூழ்ந்திருக்கும் இந்தச் சூழலில் நீ இல்லை. ஆனால், நீ படைத்தவை எங்களைக் காக்கும். ரகுமான் எழுதிய வரிகள் ‘தோல்வியின் வெற்றி’; என்னைப் போன்றவர்களுக்குப் பொருத்தமான வரிகள் அது. அவரது படைப்புகளில் நீங்கள் உலகத்தையே பார்க்கலாம். அவரது வரிகளில் புத்தர், கன்பூசியஸை சந்திக்கலாம், உலக கவிஞர்களுடன் பேசலாம், ரியலிச, சர்ரியலிசங்களை அலசலாம். இங்கிருக்கும் கவிஞர்கள் யாரும் கோபித்துக்கொள்ளக் கூடாது. கவிக்கோவைப் பற்றி ஒருமுறை கவிஞர் வாலி குறிப்பிடும்போது, ” ‘பொருள்’ வைத்தால் பாடுபவன் நான்… கவிதையில் பொருள் வைத்துப் பாடுபவன் நீ” என சிரித்துக்கொண்டே சொன்னார். நீங்கள் நிம்மதியாகத் தூங்குங்கள் கவிக்கோ… இந்த மக்களின் கண்கள் உங்களை வாசிக்கட்டும்” என்று கண்கலங்க முடித்தார் வைகோ.

கவிஞர் வைரமுத்து பேசியபோது, “அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன். எங்களையெல்லாம் விடச் சிறந்த கவிஞர் கவிக்கோதான். அப்துல் ரகுமான் மீது நிகழ்த்தப்பட்ட மரணம் கொஞ்சம் சூழ்ச்சியானது. கவிஞர், பேராசிரியர், மார்க்கவாதி, சிந்தனைவாதி, சிறந்த மனிதர் என ஒரே நேரத்தில் 5 ஆளுமைகளை வீழ்த்தி சூழ்ச்சி செய்திருக்கிறது மரணம். வைகோ பேச்சில் நெகிழ்ந்து போயிருந்தேன். அவர் பேசியபோது நான் நினைத்தேன்… ‘வைகோ மட்டும் நீண்டநாள் உயிரோடு இருந்தால், அவரை நம்பி பல கவிஞர்கள் சாகலாம்’ என்று. பாரதிதாசன் பரம்பரையில் வந்த கவிஞர்கள் அவரையே நகல் எடுப்பார்கள். ஆனால், பாவேந்தரை உள்வாங்கிக்கொண்டு, கவிதைகளில் புதுத்தடம் காண்பித்தவர் கவிக்கோ. தமிழ் வேர்களில், புதிய பூக்களைப் பூக்கச்செய்ய முயற்சி செய்தவர் அவர். தமிழ்க் கவிதைகளில் நவீனங்களைப் புகுத்த நினைத்தவர் கவிக்கோ. தனது கவிதைகளின் முதல் வரியிலேயே தான் வைத்திருக்கும் பிரம்மாஸ்திரத்தை விட்டுவிடும் தைரியம் கவிக்கோவிடம் இருந்தது.

ஒருமுறை ராமாயணம் தொடர்பான கவியரங்கத்தில் அவர்தான் நடுவர். அங்கிருந்தவர்கள் ஒரு இஸ்லாமியனுக்கு ராமாயணம் பற்றி என்ன தெரியும் என்பதுபோல் பேசினார்கள். இதுகுறித்து பதிலளித்த கவிக்கோ, ‘எனக்கும் ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம் எனச் சிலர் கேட்கலாம். ‘ரகு மானின் பின்னால் போனதுதானே ராமாயணம்’, என்றார். கூட்டம் அதிர்ந்தது. ஆம். ரகு வம்சத்தைச் சேர்ந்த ராமன், ஒரு மானின் பின்னால் போன கதைதானே ராமாயணம்! இதை தனது பெயரை வைத்து திருப்பியடித்தார் கவிக்கோ அப்துல் ரகுமான். ஒரு கவியரங்கத்துக்கு தலைமை தாங்க நேரத்துக்கு வந்துவிட்டார் கலைஞர். கவிக்கோ மட்டும் தாமதமாக வந்தார். மேடையில் பேசிய கலைஞர், ‘என்னைக் காக்க வைத்து விட்டீர்களே’ என்றார், இதற்குப் பதிலளித்து கவிபாடிய கவிக்கோ, ‘வாக்களித்தோம்… வணங்கி வரவேற்றோம்… எங்களைக் ‘காக்க’த்தானே உங்களை வைத்தோம் காக்கமாட்டீரா?’ என்றவுடன், வெடித்துச் சிரித்துவிட்டார் கருணாநிதி. கவிக்கோவுக்கு 80-வது ஆண்டுவிழா இதே அரங்கில் நடந்தது. ஆனால், இவ்வளவு கூட்டம் இல்லை. ஒரு கவிஞன் மறைந்ததும் அவனைக் கொண்டாடித் தீர்க்கிறோம். இனி இதுபோன்ற சாதனையாளர்கள் வாழும்போதே அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடத்திவிடுங்கள். அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் போன்றவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சுத்தக் கலைஞர்களுக்கு நாம் கொடுப்பதில்லை. கவிக்கோவுக்கான இந்த இரங்கல், மவுனத்தையும் அசைக்கிறது. விசில் சத்தம், கரவொலிகள் என இரங்கல் கூட்டத்திலும் மரபுகளை உடைத்திருக்கிறார் கவிக்கோ” என்றார் நெகிழ்ச்சியாக.

ஜவாஹிருல்லா பேசியபோது, “இங்கிருக்கும் பலருக்கும் இல்லாத சிறப்பு எனக்கு உண்டு. வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் கவிக்கோ அப்துல் ரகுமானுடன், பேராசிரியராக சாக்பீஸ் பிடித்தவன் நான்” என்றார். மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு, “கவித்துறையில் மட்டும் தனது கவனத்தைச் செலுத்தியவர் கவிக்கோ. மக்களின் குரலாக ஒலிக்கக்கூடியவர் அவர்”, என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே சாதி. ஒடுக்குகிறவர்கள் ஒரே மதம் என்று என்னுடைய பொன்விழாவில் சொன்னார் கவிக்கோ. அவர் ஒரு போராளியாக விளங்கியவர். இஸ்லாமியராகப் பிறந்திருந்தாலும் ஒரு பெரியாரியவாதியாகவும் மார்க்சியவாதியாகவும் அம்பேத்கரியவாதியாகவும் தமிழராகவும் வாழ்ந்தவர் கவிக்கோ” என்றார்.

இறுதியாக நிகழ்ச்சி முடியும்போது மணி இரவு 11. நல்லகண்ணு, வைகோ, திருமா என பலரும் மேடையில் மௌனமாக அமர்ந்திருந்தனர். மொத்தக் கூட்டமும் கலையாமல் அப்படியே நெகிழ்ந்து உட்கார்ந்திருந்தது. விழா பேனரில் அச்சிடப்பட்டிருந்த கவிக்கோ சலனமில்லாத புன்னகையோடு நிகழ்வை பார்த்துக்கொண்டிருந்தார். வைரமுத்து சொன்னதுபோல், கவிக்கோ போன்ற ஒரு மனிதருக்கு அவர் இருக்கும்போதே இரங்கல் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும் போல!

பாருக்குள்ளே நல்ல நாடு

(கவிக்கோ அப்துல் ரகுமான்)

அவர்களைச் சிறையில் சந்தித்தேன்.
“என்ன குற்றம் செய்தீர்கள்” ?
என்று கேட்டேன்.
ஒவ்வொருவராகச் சொன்னார்கள்..
எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான்.
“திருடன் திருடன்” என்று கத்தினேன்.
அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக் கைது செய்து விட்டார்கள்.
“என் வருமானத்தைக் கேட்டார்கள்”
‘நான் வேலையில்லாப் பட்டாதாரி’ என்றேன்
வருமானத்தை மறைத்தாக வழக்குப்
போட்டு விட்டார்கள்.
“நான் கரி மூட்டை தூக்கும் கூலி”
கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில்
கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது.
கறுப்பு பணம் வைத்திருந்ததாகக்
கைது செய்து விட்டார்கள்.
“என் வயலுக்கு வரப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்
பிரிவினைவாதி என்று பிடித்துக் கொண்டு
வந்து விட்டார்கள்”
“அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன்.
அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச்
செய்ய விடாமல் தடுத்ததாகத் தண்டித்து விட்டார்கள்.”
“அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படச்
சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்.
சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு
செய்ததாக அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள்”
“வறுமைக் கோட்டை அழிப்போம்” என்று பேசினேன்.
அரசாங்க சொத்தை அழிக்கத் தூண்டியதாக
அடைத்துப் போட்டுவிட்டார்கள்”
“ஊழல் பேர்வழிகளை நாடு கடத்த வேண்டும்”
என்று எழுதினேன், “கடத்தல்காரன்” என்று
கைது செய்து விட்டார்கள்.
“நான் பத்திரிக்கை ஆசிரியன். தலையங்கத்தில்
உண்மையை எழுதினேன். நாட்டின்
ஸ்திரத் தன்மையைக் குலைத்ததாகக்
கொண்டு வந்து விட்டார்கள்”
“சுதந்திர தின விழாவில் ‘ஜன கண மன’ பாடிக்
கொண்டிருந்தார்கள். நான் பசியால் சுருண்டு
படுத்துக்கொண்டிருந்தேன். எழுந்து நிற்க முடியவில்லை.
தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகச்
சிறையில் அடைத்து விட்டார்கள்”
“அக்கிரமத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தச்
சொன்னான் கண்ணன்” என்று யாரோ
கதாகாலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள்
என்பெயர் கண்ணன். “பயங்கரவாதி” என்று
என்னைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
நான் வெளியே வந்தேன்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும்
இல்லாமல் நாடு
அமைதியாக இருந்தது..

தொலைந்து போனவர்கள்


(கவிக்கோ அப்துல் ரகுமான்)

விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்ல
மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.
கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல
குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல
உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்
ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்
‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு..!!

உனக்கென ஒரு கவிதை…

arr-2

கவிக்கோ….!

வைகை நதிக்கரையில் மலர்ந்து; தமிழ்ப் பொய்கையில் ஊறித் திளைத்த அனிச்ச மலர்.

“பால்வீதி”யை படித்துப் பாருங்கள். இந்த முப்பால் அருந்திய மூத்தக் குழந்தை, தமிழ்ப்பால் கொண்டிருக்கும் தாகம் தப்பாமல் விளங்கும்.

இவன் சிறகுகளை விரித்த பிறகுதான் எத்தனையோ பேர்களுக்கு பறக்கவே ஆசை பிறந்தது.

“அந்தமானைப் பாருங்கள் அழகு”. ஆசுகவி கண்ணதாசன் சொன்னது.  அட…! அந்தமான்  கிடக்கட்டும்… அந்தமான்… இந்த இனமானத் தமிழன் எங்கள் ரகுமானின் இன்பத்தமிழ் அந்தமானைக் காட்டிலும் அழகோ அழகு.

கலைஞர் சொன்னதுபோல் ரகுமானோ கன்னித்தமிழுக்கு கிடைத்த வெகுமானம்.

பாரதிதாசன் கூறிய “அழகின் சிரிப்பை”; – தமிழ் அழகின் சிரிப்பை – இவன் கைவண்ணத்தில்தான் மின்னக் கண்டேன்.

மனிதம் பாதி; மகத்துவம் பாதி; கலந்து செய்த கலவை இவன்.
ஆம். இவன் கலப்பட மனிதன். இன்பத்தமிழை “ஆளவந்தான்” இவன்

“சிரிப்பு பாதி; அழுகை பாதி; சேர்ந்ததல்லவோ மனித ஜாதி,
நெருப்பு பாதி; நீரும் பாதி; நிறைந்ததல்லவோ மனித நியதி”  பாடி வைத்தான்   பாட்டரசன் கண்ணதாசன்.

இந்தக் கலவை மனிதன் கால்வாசி பாப்லோ நெரூடா, கால்வாசி ரூமி, கால்வாசி தாகூர், மீதி கால்வாசி இக்பால்.

“கவிதைக்கு பொய்யழகு” என்றான் கவிஞர் வைரமுத்து. அது பொய்யென்றுதான் நினைக்கிறேன். அதெப்படி இவன் கவிதை மட்டும் உண்மையே பேசுகிறது… ..?

இயக்குனர் ஒருவர், கவிஞர் வாலியிடம் ‘கன்னம்’ என்ற சொல்லுக்கு எளிமையான வார்த்தையாகப் போடுங்கள் என்றாராம். ‘கன்னம்’ என்பதே எளிமையானது தான் என்று அவர் சொல்லிப் பார்த்தார். இயக்குனர் கேட்கவில்லை. இதனை கவிக்கோவிடம் கவிஞர் வாலி சொன்னபோது அவர் சிரித்துக்கொண்டே சொன்னது:

‘கேட்டவன் கன்னத்தில் ஒன்று போட வேண்டியதுதானே…..?’

சீதையின் அழகை கம்பன் படலம் படலமாக வடித்துச் சொன்னான். கவிக்கோ அதனை இரண்டே வரிகளில் எடுத்துச்  சொன்னார். ராவணன் சொல்கிறானாம்:

“இருகண் படைத்தவனே இவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த நான் என்ன செய்வேன்?”

அற்புதம். பக்கவாட்டுச் சிந்தனை என்பது இதுதானோ..?

ஆண்டுகள் பல சென்றாலும்  மீண்டும் மீண்டும்  இவனைப்பாட    எனக்கு ஆசை..!

*************************

முத்தமிழ் நாயகனே.! உன்மீது மோகம் கொண்டவர்கள் முத்தமிட நினைப்பது உன் ஆறாவது விரலைத்தான்.

உன் “பம்பர ஞானம்” இந்த பாமரனையும் சித்தி பெற வைத்தது.

குத்துமதிப்பாய் யாரோ சொன்னார்கள் உனக்கு சினிமா பிடிக்காது என்று. நீ குத்துப்பாட்டை குத்திக் காட்டியது நினைவில் நிழலாடுகிறது.

“பத்துப்பாட்டு என்றால் பதறுகிறோம்; திரைப்படத்தில்.. குத்துப்பாட்டு என்றால் குதூகலமாய் ஆடுகிறோம்” என்றாயே….?

தமிழனைப் பார்த்து நீ வேதனைப்பட்டது  நினைவிருக்கிறது.
“உன் சிலம்பம் அதிகாரம் செய்தது அன்று – இன்றோ
அதிகாரக் கால்களில் சிலம்பாகி கிடக்கிறான் தமிழன்” என்றாய்….!

இன்றைய நாட்டின் நிலைமையை அன்றே நாசுக்காய் கணித்துச் சொன்ன நாஸ்ட்ரடாம்ஸ் நீ…!
“கங்கைகொண்டவன்தான் இன்று காவிரியையும் இழந்துவிட்டு கையைப் பிசைந்து நிற்கிறான்” என்றாய் ..!

பாவம் என்ன செய்தான் அவன்? பாரதியையும் கலாய்த்த பாவலன் நீ…!
“தெருவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வோம் என்ற பாரதியே!
வந்து பார் இப்போது தமிழ் தெருவில்தான் நிற்கிறது” என்றாய்.

“உம்”மென்று சும்மா இருக்கவில்லை நீ. அரசியலையும் “சுப்புடு”வாய் அழகுறவே விமர்சனம் செய்தாய்.
“இந்த நாட்டில் நடிப்பவர்கள்தான் தலைவர்களாகிறார்கள் – அல்லது
தலைவர்களாக இருப்பவர்கள் நடிக்கிறார்கள்”
கூத்தாடிகளின் உண்மைத்தோண்டியை ஆண்டியாய் மாறி கூத்தாடாமலேயே போட்டுடைத்தாய்.

நீ அம்புலிமாமாவாய் மாறி குழந்தைகளுக்கு அளித்த அறிவுரையை யாரால் மறக்க இயலும்…?
“புத்தகங்களே..! குழந்தைளை கிழித்து விடாதீர்கள்…!”
ஆகா..! தத்துவ சிந்தனையில் சாக்ரடீஸ் நீ…!

“வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” என்று கேள்வி கேட்டு எங்களை திணறடித்தாய்.

ஞானப்பழம் பெற்றிட மயிலேறி உலகமெலாம் சுற்றி வந்தானாம் முருகன். இருக்குமிடத்திலேயே இருந்துக்கொண்டு அம்மை அப்பனை சுற்றிவந்து வெற்றி கண்டானாம் விநாயகன்.
தலையணை சைஸ் சிலப்பதிகாரக் கதையை “தம்மாந்துண்டு” வரிகளில் சரியாக புரியவைத்த மரியாதைக்குரியவன் நீ…!

“பால் நகையாள்; வெண்முத்துப் பல் நகையாள்; கண்ணகியாள்; கால் நகையால்;
வாய் நகைபோய்; கழுத்து நகை இழந்த கதை” என்று சுருக்கெழுத்தில் புரிய வைத்த பிட்மேன் நீ…!

இயக்கங்களால் பிரிந்து கிடக்கும் இஸ்லாமியச் சமுதாயத்திற்கும் “செக்” வைத்த விஸ்வநாதன் ஆனந்த் நீ…!
“உன் பகைவர்கள் உன் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள் -நீயோ…அத்தஹிய்யாத்தில் விரலை ஆட்டுவதா நீட்டுவதா என்று சர்ச்சையிட்டுச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாய்” என்று சரியாகச் சொன்னாய்..!

அது மட்டுமா? “சமூகத்தில் தொழுவதே கொஞ்சம் பேர்கள் தாம் அவர்களையும் நீ
குழப்பிக் கொண்டிருக்கிறாய்” என்று சமுதாயக் குழப்பிகளுக்கு சவுக்கடி தந்தாய்…!

வார்த்தைகளை மடக்கி எழுதினாலே கவிதை என்கிறார்கள். நீயோ..   வாசகன் மனதை சொடுக்கி எழுதத் தெரிந்த வசீகரன்.

நீ கோபித்துக் கொண்டாலும் சரி. நான் ஒன்றை இங்குச் சொல்லியே தீர வேண்டும். வக்பு வாரியத் தலைவராய்  நீ பதவி வகித்த காலம், தமிழிலக்கியத்தின் வறுமைக் காலம். நீ உன் மவுன முகாரியைத் துறந்தபோதுதான், மூத்த மொழிக்கு மோகனம் பிறந்தது.

அம்மிக் கொத்த மறுத்த சிற்பியே..! ஆண்டுகள் நூறு நீ வாழ வேண்டும்! அழகான சிற்பங்கள் படைக்க வேண்டும்! அமுதத் தமிழ் அருந்தி நாங்கள் அகமகிழ வேண்டும்.

நீ பிறந்த நாள் கொண்டாடுவதில்லை. என்றபோதிலும்; தமிழுலகம் நீ பிறந்த நாளை மறக்கத் தயாரில்லை.

#அப்துல் கையூம்

தமிழிலக்கிய வரலாற்றில் நீ ஒரு தனிப் பறவை!

arr-2

மதுரையில் பிறந்த
மதுரம் நீ!
அதன் சாரம்,
புதுகையில் இருந்து
ஊற்றெடுத்த தென்பதுன்
பூர்வீகம்.
உர்தூ குடும்பத்து
உதயத்தை
உவகை பொங்க
தமிழ்த்தாய்தான்
தனதாக்கிக் கொண்டாள்!
வைகைக் கரையில் தொடக்கம்…
வையகக் கரையெங்கும் தமிழ் முழக்கம்!
ஆற்றில் வருகின்ற
அலையெல்லாம்
புதிதானாலும் அதன்
பொதுப் பெயர்
தண்ணீரே.
நீ,
தண்ணீர் மட்டும் அல்ல;
பாலாய்,தேனாய்ப்
பாயத் தெரிந்தவன்! (1)
உன் சிந்தனை,
செந்தமிழைச்
செழுந்தமிழாக்கியது;
மனதை
உழுந்தமிழாக்கியது.
அதனால்
உள்ளங்கள்,
வெளிச்ச
வெள்ளங்களாயின!
முள் கிரீடங்களைக்
கழற்றவும்
சிலுவைகளை இறக்கவும்
எல்லாருக்கும்
சொல்லிக் கொடுத்தவன் நீ!
இலக்கியப் பயணம்
மேற்கொண்டோரெல்லாம்
இலக்கை அடைந்தவர்கள்
இல்லர்.
அது உனக்கு
அருளப்பட்டது.
ஆனாத நூற்கடலை
அளித்த தமிழமுதும்
முன்னர்
காணாத தேன்துளி நீ!
கண்டார்க்கோ புது ஒளி நீ!
(2)
பரிசோதனை முயற்சிகள்
பரிகாசம் ஆவதுண்டு;
உன்
பரிசோதனைகள் எல்லாம்
தமிழுக்குப்
பரிசாக ஆனதென்ன!
எழுதுகோலை
நெம்புகோலாக்கி
இலக்கிய உலகை
இடம்மாற்றி வைத்தவனே,
உன்
அறிவின் அடர்த்தி
விளைவித்த
வேறுபாடுகளால்
அம்மி மிதந்தது;
சுரையும் ஆழ்ந்தது!
பயணத்தைப்
”பால் வீதி”யில்
தொடங்கிய நீதான்,
நிரந்தரமான
”நேயர் விருப்பம்”.
உன் சுட்டுவிரல் அசைவு
ஆலாபனை;
நீ சொல்வதெல்லாம் கவிதை
ஆராதனை.
(3)
கதவுகள் இல்லாக்
கருவூலமே,
உன்னைக்
கொள்ளையடிப்பதில்
இருக்கிறது எம்
குதூகலம்!
சுயத்தை இழக்காதவை உன்
சொற்கள்.
நயத்தை இழக்காதது உன்
நாகரிகம்.
அல்லாஹ்வின்
பயத்தை இழக்காதது உன்
பயணம்-பாதை…
உன் இல்லமெனும்
`ஹிரா’ குகையிலிருந்து
“பாலை நிலா”வின்
வெளிச்சத்தை வெளிப்படுத்து,
உன்
பரிசாக.
தமிழிலக்கிய வரலாற்றில்
நீ ஒரு
தனிப் பறவை;
ஆயினும் உன்பின்னால்
ஆயிரம் ஆயிரம் பறவைகள்!

—ஏம்பல் தஜம்முல் முகம்மது

yembal