கஜல் கவிதை

கஜல் ஓர் அறிமுகம்.

‘கஜல்’ அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.
‘கஜல்’ என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள். கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை. ‘கஜல்’ இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

- அப்துல் ரகுமான்.

அப்துல் ரகுமான், கஜல் எனும் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். ஆனால்,உருதுவில் ‘மிர்சாகாலிப்’ தான். கஜல் என்றாலே அதில் ‘மிர்சாகாலிப்’பின் வாசம் வீசும்.’ என்கிற அளவுக்கு அதில் அவர் சிறந்த கவிஞர். அவரின் கஜல் ஒன்று…

காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு
வினோதமான நெருப்பு!
பற்றவைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது!

- மிர்சாகாலிப்

அப்துல் ரகுமானின் கஜல் துளிகள் சில…

நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்

*******

என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?

*********

உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.

*******

மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது

************

என் கனவு
உன்முன் ஏந்திய
பிச்சை பாத்திரம்

*******

உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னைப் பார்த்தேன்.

- அப்துல் ரகுமான்.

நன்றி : குடந்தை அன்புமணி

மாண்புமிகு மனிதர்கள்

கவியரங்கக் கவிதை

கவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது

தொடக்கம் உன் பெயரால்
தொடர்வதெல்லாம் உன் அருளால்
அடக்கம் நீ என் நெஞ்சில்
அடங்காத பேரொளியே
முதல்வா உன்னை என்
முதலாகக் கொண்டதால்
என் வாழ்க்கை வணிகத்தில்
இழப்பே இல்லை

தாள் கண்டால் குனிந்து
தலை வணங்கும் பேனா
உன் தாள் பணியும்
உபதேசம் பெற்ற பின்னர்
எழுத்தல்ல இறைவா
இவையெல்லாம்
என் எழுதுகோல் செய்த
‘சஜ்தாவின்’ சுவடுகள்
(சஜ்தா – சிரம் பணிதல்)

உன் பெயரில் ஊற்றெடுத்து
ஓடுகிறேன் நதியாக
கலப்புக்கும் நீயே
கடலாகி நில்
எண்ணுவது உன்னையே
எழுதுவது உன்னையே
உண்ணுவது உன்னையே
உயிர்ப்பதும் உன்னையே
என்னை உன் கையில்
எழுதுகோலாய் ஏந்தி
நின்னையே நீ எழுதிக்கொள்

நாமோ
பாவலர் உமரின்
பரம்பரையில் வந்தவர்கள்
சேகுனாப் புலவரின்
செல்லக் குழந்தைகள்
பீரப்பாவின் பேரப்பிள்ளைகள்
காசிம் புலவரின்
கால்வழித் தோன்றல்கள்
வண்ணக் களஞ்சிய
வாரிசானவர்
குலாம் காதிரின்
குலக் கொழுந்துகள்
செய்குத் தம்பியின்
சின்னத் தம்பிகள்
ரகுமான் என்றால்
இது என்ன ரக மான் என்பார்
பொய்மான் பின்னால்
போனவன் அல்ல
நான் ‘ஈமான்’ பின்னால்
ஏகும் ரகுமான்

இதுவரை ஒட்டடை அடிக்கக்
கோல் ஏந்தினோம்
இன்றோ நான்
ஓர் ஒட்டடையை புகழக்
கோல் ஏந்தினேன்
அன்றொரு நாள் என் வீட்டில்
ஒட்டடை அடிக்கக் கோலெடுத்து நின்றேன்
மூலையில் ஒரு சிலந்தி வலை
அடடா என்ன அழகு
கவிதை மனம் அந்த வலையில்
சிக்கிக் கொண்டது
அழகும் ஒரு வலைதான் – அதனால் தான்
நாமெல்லாம் அகப்பட்டு
கொள்கிறோம் அதற்குள்ளே

உலகத்தை பார்க்கிறேன்
எத்தனை சிலந்திகள்
இதோ இரவு
கறுப்பு இழைகளால் வலை பின்னுகிறது
வலையில் சிக்கித் துடிக்கின்றன
நட்சத்திர ஈக்கள்

இதோ
இருட்டில் ஒருத்தி
ஒப்பனையால் வலை விரித்து
இரைக்காகக் காத்திருக்கிறாள்
பாவம் தானே இரையாகிறாள்
அதோ சூரியன்
கிரணங்களால் வலை பின்னுகிறான்
இருளைப் பிடித்து
உண்பதற்கு

அதோ அரசியல் மேடையில் ஒருவன்
வார்த்தைகளால் வலை பின்னுகிறான்
எதிரே அப்பாவி இரைகள்
பிரபஞ்ச வலையைப் பின்னிவிட்டு
மறைந்து உட்கார்ந்திருக்கிறானே
அவனும் ஒரு சிலந்தி தான்
அவனுடைய இரை நாம் தான்
அவனே படைத்து
அவனே உண்ணும் வரை

எழுதுகோல் ஏந்துகிறவன் நான்
ஒட்டடைக் கோல் ஏந்தியபோதும்
ஊறியது கற்பனை
சிலந்தி வலை பின்ன
சிலந்தியைப் பற்றி நான்
சிந்தனை வலை பின்னி நின்றேன்

அற்பப் பிராணியா சிலந்தி இல்லை
அற்புதப் பிராணி நம்முடைய
வீட்டுக்குள் வீடு கட்டும்
விந்தைப் பிராணி
இதற்குத்தான் எவ்வளவு தன்மானம்
நம்மைப் போல்
அந்நியப் பொருள்களால் வீடு கட்டாமல்
தன் சொந்தப் பொருளாலல்லவா
வீடு கட்டுகிறது
வாயால் ஆகாயக் கோட்டைகளை
கட்டும் மனிதர்களை விட
இச்சிலந்தி உயர்ந்தது
இதுவும் வாயால்தான் கட்டுகிறது
ஆனால் உண்மையாகவே
ஒரு வீட்டைக் கட்டிவிடுகிறது

உணவு, உடை, உறையுள்
இந்த மூன்றையும்
மனிதன் தனித்தனியாக
தேட வேண்டியிருக்கிறது
சிலந்திக்குத்தான்
எத்தனை சாமர்த்தியம்
நூலாலேயே ஒரு
வீடு கட்டிவிடுகிறது அந்த
வீட்டாலேயே உணவையும்
பெற்று விடுகிறது

இந்தச் சிலந்தி
வாயால் பூ வரையும்
ஓவியனா இல்லை
சுவருக்கே ஆடை கட்டும்
பைத்தியமா?
சிலந்திக்கு மட்டும் என்ன
இவ்வளவு அழகிய வாந்தி
எவ்வளவு நூல் நூற்றாலும்
இப்பஞ்சு குறைவதே இல்லை

எங்கள் இதயம்
இரண்டு குகைகளை மறந்து விடாது
ஒன்று ‘ஹிரா’
வெளிச்சம் பிரசவமான விடுதி
மற்றொன்று ‘தௌர்’
அந்த வெளிச்ச தீபம்
அணைந்து விடாமல்
காப்பாற்றிய கல் சிம்னி

‘தௌர்’ குகையே
கல் கூடாரமே
சரித்திரத்தில் எத்தனையோ
தங்குமிடங்களைப் பார்த்திருக்கிறோம்
ஆனால்
சரித்திரத்தில் தங்கிவிட்ட
தங்குமிடம் நீ மட்டும்தான்

‘தௌர்’ குகையே
கல் வாயே
அன்று எவ்வளவு பெரிய ரகசியத்தை
நீ மறைத்து வைத்திருந்தாய்
எங்கே நீ உளறி விடுவாயோ
என்று பயந்துதான்
சிலந்தி உன் உதடுகளைத் தைத்ததோ

சிலந்தியே
இரையைப் பிடிப்பதற்குத்தான்
நீ வலை பின்னுவாய்
ஆனால் அன்று
மக்க நகரத்து
மிருகங்களின் இரையைக்
காப்பாற்றுவதற்கல்லவா
நீ வலை பின்னினாய்

உலகத்தின் ஒட்டடைகளை
அழிக்க வந்த இஸ்லாத்தில்
சிலந்தியே நீ அன்று கட்டிய
வலையை மட்டும்
நாங்கள் அழிக்க விரும்பவில்லை
ஏனென்றால்
ஒட்டடைக் கோலையே காப்பாற்றிய வலை
உன் வலை தான்

மீன் பிடிப்பதற்காக வலை விரிப்பார்கள்
ஆனால் நீயோ ஒரு மீன்
எங்கள் மீன் அல் அமீன்
தப்புவதற்கல்லவா வலை விரித்தாய்
சிலந்தியே அன்று மட்டும்
உன் வலை கொசுவலையாக இருந்தது
சித்தம் மகிழும் செம்மல் நபியின்
ரத்தம் குடிக்க வந்த
குரைஷிக் கொசுக்களை
அண்டாமல் விரட்டியதால்

அகமது நபியின்
ஆள் மயக்கும் அழகு கண்டால்
அகம் அது மயங்கும்
முகமது நபியின்
முத்து நிலா முகம் கண்டால்
மூ உலகும் தான் மயங்கும் என்று
அவர் முகமது மறைக்க
ஒரு முத்திரை போட்டாயோ

நிர்வாண உலகத்திற்கு
ஆடையாய் வந்தவரைப் பாராட்ட
பொன்னாடை நெய்து
போர்த்தினாயோ இல்லை
குபுரியத்திற்கு (குபுரியம் – இறை மறுப்பு)
கபன் நெய்யத் தொடங்கினாய்
(கபன் – இறந்த உடலை மூடும் தையலில்லாத வெண்ணிற ஆடை)
இறைவன் தந்த நூல் மறை நூல்
உன் நூலோ மறை கொணர்ந்த
தூதரை மறைத்த நூல்
அன்று உன் மறை நூலால்
இறைவனின் மறை நூலையே
காப்பாற்றிவிட்டாய்

இறைவா
வீடுகளிலேயே
பலவீனமான வீடு
சிலந்தியின் வீடுதான் என்று
உன் திருமறையில் கூறினாய்
ஆனால் என்ன அதிசயம்
அந்த பலவீனமான வீடு
எவ்வளவு பலமான
கோட்டையை கட்டிவிட்டது

இறைவா நீ நினைத்தால்
ஒரு மேலாம் படையைக் கூட
ஒரு நூலாம் படையால்
தடுத்து நிறுத்தி  விடுகிறாய்
சிலந்திகள்
ஒட்டடைக் கோலால் அழியும்
நீயோ ஓர் ஒட்டடைக் கோலை
காப்பாற்றிய சிலந்தி
இருண்ட மூலைகளில்
வலை பின்னியிருந்த
மூடச் சிலந்திகளை
ஒழிக்க வந்த ஒட்டடைக் கோல்
உன்னாலல்லவா அன்றி காப்பாற்றப்பட்டது

இதோ
என் வாயும் ஒரு சிலந்திதான்
வார்த்தைகளால் கவிவலை பின்னுவதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அது மாநபியை மறைப்பதற்காக
வலை பின்னியது
இது வேத நபியை வெளிப்படுத்துவதற்காக
வலை பின்னுகிறது

என் இதயமும் ஒரு தௌர் குகைதான்
அங்கே ஏந்தல் நபி எழுந்தருளி இருப்பதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அந்தக் குகை அவர்களை வெளியே விட்டது
இந்தக் குகையோ அவர்களை வெளியில் விடாது
இறைவா
அந்தச் சிலந்தியாய் என்னைப்
பிறக்க வைத்திருக்கக் கூடாதா?
இந்த மனிதப் பிறவியை விட
மகத்துவம் பெற்றிருப்பேனே
என் கவிதைகளை நாடு புகழ்கிறது
ஆனால்
என் கவிதைகளை விட
அந்தச் சிலந்தி வலை உயர்ந்ததல்லவா

புனிதமான சிலந்தியே
இதோ என் இதய வீட்டில்
நன்றிக் கண்ணீராலேயே
ஒரு வலை பின்னிக் கொடுக்கிறேன்
நீ இங்கே நிரந்தரமாகவே தங்கிவிடு

- கவிக்கோ அப்துல் ரஹ்மான்

தாயிப் நகரில் தாஹா நபிகள்

Kavikko

நபிகள் பெருமான் -
இல்லாமல் வாடிய
ஏழை உலகம்,
கேட்காமலேயே
கிடைத்த அருட்கொடை !
தட்டாமலேயே
திறந்த கதவு !
தேடாமலேயே
தெரிந்த மூலிகை !

இளமையில் பெற்றோரை
இழந்த இவ்வனாதைதான்
உலகுக்கே தாயாகி
ஊட்டி வளர்த்தவர் !

படிக்கத் தெரியாத – இந்தப்
பாமர நபியிடம்தான்
பள்ளிக் கூடங்களும்
பாடம் பயின்றன
இல்லை ..
பல்கலைக் கழகங்களே
பாடம் பயின்றன !

கந்தல் அணிந்த – இந்தக்
கருணைநபி கையால்தான்
அம்மண உலகம்
ஆடையைப் பெற்றது !

பாலையில் முளைத்த – இந்த
பசுமர நிழலில்தான்
வெயிலும்கூட
இளைப்பாற வந்தது !

இந்த ஏழையை
ஈன்ற பின்னரே
கிடக்காத புதையல்
கிடைத்தது போன்று
இந்த உலகம்
இறுமாப் படைந்தது !

மண்ணில் – இந்த
மணிவிளக்கைக்
கண்டபின்தான்
விண்ணும்தன் சுடர்களுக்காய்
வெட்கம் கொண்டது !

வல்லூறுகளும் – இவர்
வலைக்குள் குடிபுகுந்து
வெள்ளைப் புறாக்களாய்
விண்ணெங்கும் பறந்தன !

உயர்மறை மகுடி – இவர்
ஊதியத்கைக் கேட்டவுடன்
நாகத்தின் பற்களிலும்
நல்லமுதம் ஊறியது !

தனித்தனி சாதி
அறைகளில் கிடந்த
மனித எழுத்துக்களை
ஒரே வாக்கியமாக
அச்சுக் கோர்த்து
சகோதரத்துவ
சமுதாயம் கண்டவர் !

பாட்டால் புகழைப்
பலர் பெறுவர் – ஆனால்
பரமனின் நபியைப்
பாடுவதால் நமது
பாட்டுக்கல்லவா
பெரும்புகழ் கிடைக்கும்

அன்று – அந்தத்
தாயிப் நகரில்
தாஹா நபிகள் !

தாயிப் வாசிகளே !
விந்தை மனிதர் நீர்!
கல்லின் மீதுதான்
பூவைத் தூவுவீர்

ஆனால் அன்று
(பூமான் நபியெனும்)
பூவின் மீதல்லவா
கல்லைச் சொரிந்தீர் !

வெல்வதாக நினைத்தீர் !
ஆனால் – தோற்றவர் நீங்களே !
நீங்கள் வணங்கும்
கற்களை அல்லவா
கருணைநபி காலடியில்
மண்டியிட வைத்தீர் !

உங்கள் கற்கள்
ஏற்படுத்தியவை காயங்கள் அல்ல !
பொறுமைக்குக் கிடைத்த
இரத்தினப் பதக்கங்கள் !
இறை சோதனையின்
குங்கும முத்தங்கள் !

பொய்மையை எதிர்த்த
வாய்மைத் தூதருக்கு
ரணங்கள் தானே
ஆபரணங்கள் !

அதோ பாருங்கள் !
நீங்கள் எறிந்த கற்கள்
பச்சை ரத்தம்
படிந்து கிடப்பதை !
காயங்கள் செய்த
பிரச்சாரத்திற்குரிய
பெரிய வெற்றி !
அவை கூட
மதம் மாறி விட்டன !

தாயிப் வாசிகளே !
கனிமரம் என்பதால்
கல்லெறிந்தீரோ?
கல்லடி பட்டால்
கனி மட்டுமா உதிரும்?
காய்கூட உதிருமே !

ஆனால்
கல்லடிக்குக்
கனிமட்டும் உதிர்ந்த
கருணை மரத்தை
வேறு எங்கேனும்
கண்டவருண்டோ?

எங்கள் பெருமான்
காயம்பட்டதோ
அன்றொருநாள் !
ஆனால் இரத்தமோ
இன்றுமல்லவா வழிகிறது
எங்களின்
எழுதுகோல் வழியே !
[1978, நவம்பர் 14-ஆம் நாள் காயல்பட்டினத்தில் நிகழ்ந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில் கவிக்கோ தலைமையில் நடந்த இஸ்லாமியக் கவியரங்கில் அவர் பாடிய தலைமைக் கவிதையின் ஒரு பகுதி]

Kalingar

கவிக்கோவைப் பற்றி கலைஞர்

“பாரதிக்கு தாசன்
பாரதி தாசனென்றால் – அந்தத்
தாசர்க்குத் தாசர் இவர்
தமிழ்க் கவிதை பாடுவதில்
குடமிட்ட தீபமிவர் – இனிமேல்
குன்றிலிட்ட விளக்காவார் !
புடமிட்ட தங்கமிவர் – இனிமேல்
புகழ் மீட்டும் வீணையிவர் !”

மு. கருணாநிதி

கவிஞர் வாலி

vaaliசினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கும். அதை தீர்மானிப்பவன் இறைவன்தான். ‘உனக்கு பாட்டு எழுத வராது; ஊரில் நிலம் இருந்தா போயி விவசாயம் பண்ணு’ என்று என்னை விரட்டியவர் எம்.எஸ்.விசுவநாதன். பிறகு அவர் இசையில் 3 ஆயிரம் பாடல்களை எழுதினேன்.

‘சந்திரலேகா’ படத்தில் ராஜாவின் செருப்பை எடுத்து வைக்கும் வேலையாள் வேடம் கூட மறுக்கப்பட்ட சிவாஜி கணேசன் பிற்காலத்தில் நடிகர் திலகமாக வளர்ந்தார். இப்படி சினிமாவில் ஜெயிக்க காலம் நேரம் கூடி வரவேண்டும்.

சில இயக்குனர்கள் நான் நினைத்தது வரவில்லை என்பார்கள். ஒரு இயக்குனர் ‘கன்னம்’ என்ற சொல்லுக்கு எளிமையான வார்த்தையாகப் போடுங்கள் என்றார். ‘கன்னம்’ என்பதே எளிமையானது தான் என்று சொல்லிப்பார்த்தேன். அவர் கேட்கவில்லை. கவிஞர் அப்துல்ரகுமானிடம் இதை கூறினேன். ‘கேட்டவன் கன்னத்தில் ஒன்று போட வேண்டியதுதானே’ என்றார்.

- விழாவொன்றில் கவிஞர் வாலி

ராவணா

ravana

ராவணனை எல்லோரும் வில்லனாகப் பார்க்கையில் கவிக்கோ அவர்களின் பார்வை சற்று வித்தியாசமாக இருந்தது.

இருகண் படைத்தவனே
இவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த நான்
என்ன செய்வேன்?

என்று சீதையைப் பார்த்து ராவணன் சொல்வதாக புனைந்த கவிதை அவரை பிற கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பித்தது.

குழந்தைகள் தினம்

baby

“வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

தேசிய நீரோட்டம்

அணைகளை உடைத்து
கரைகளைத் தகர்த்து
மரங்களைச் சாய்த்து
இதோ
பாய்ந்து வருகிறது
தேசிய நீரோட்டம்

ஏன் விலகி நிற்கிறீர்கள்?
குதியுங்கள்.

நவீன பாவங்களை
கழுவுவதற்காகவே
புறப்பட்டு வந்த
புண்ணிய தீர்த்தம் இது.

அதோ
சாக்கடைகள் எல்லாம்
இதில்
சங்கமாகிப்
பவித்திரமடைவதை நீங்கள்
பார்க்கவில்லையா?

இதோ தங்கள் தீட்டுத் துணிகளை
இதில்
துவைத்துக்கொள்கிறவர்களை-
தங்கள்
வலையை வீசி இதில்
மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களை-
நீங்கள் பார்க்கவில்லையா?

நீங்கள் மட்டும் ஏன்
விலகி நிற்கிறீர்கள்?

வான் பொய்த்தாலும்
தான் பொய்க்காத
நீரோட்டம் இது
தாகம் தணித்துக்கொள்ளுங்கள்;
வறண்ட வயல்களுக்கு
வாய்க்கால் வெட்டிப் பாய்ச்சுங்கள்.

உங்கள்
கப்பரைகளுக்கு இதனால்
ஞானஸ்நானம் கொடுங்கள்.

உங்கள் தீபங்களை இதில்
மிதந்து போக விட்டுவிடுங்கள்
உங்கள் முகவரிச் சுவடிகளை இதில்
போட்டு விடுங்கள்

உங்கள் கனவுகளின் அஸ்தியை இதில்
கரைத்து விடுங்கள்

உங்கள் ரத்தத்தை
வெளியே கொட்டி விட்டு
இதை நிரப்பிக் கொள்ளுங்கள்

இனி
நீர்களுக்கு
தனி விலாசங்கள் தேவையில்லை

நதிகள் குளங்கள் கிணறுகள்
எல்லாம் மூழ்கிவிட்டன.
கண்ணீரும் மூழ்கிவிட்டது

நீங்களும் மூழ்கிவிடுங்கள்

- கவிக்கோ அப்துல் ரகுமான்

பம்பர ஞானம்

top

அமாவாசை நள்ளிரவு. எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வானத்தில் நிலா இல்லை; நட்சத்திரங்களும் இல்லை.

ஓர் இலைகூட அசையவில்லை.

எங்கும் நிசப்தம்; நிச்சலனம்.

உலகமே ஸ்தம்பித்துவிட்டது போல் தெரிகிறது.

ஆம்; உண்மைதான். உலகம் ஸ்தம்பித்துவிட்டது போல் தெரிகிறது. ஸ்தம்பித்து விடவில்லை.

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்; கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

நாம் நினைப்பதுபோல் உறக்கம் என்பது இயக்கமின்மை அல்ல; அதுவும் ஓர் இயக்கமே.

அமாவாசை. அதனால் நிலா தெரியவில்லை. ஆனால் நிலா இல்லாமல் போய்விடவில்லை. இருக்கிறது.

மேக மூட்டம். அதனால்; நட்சத்திரங்கள் தெரியவில்லை. ஆனால் நட்சத்திரங்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இலை அசையவில்லை. ஆனால் இலைக்குள் ஆயிரமாயிரம் அணுக்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.

நிசப்தம் என்றால் சப்தமே இல்லாமல் போய் விடவில்லை. காற்று மண்டலத்தில் ஒலி பரப்பப்பட்ட எத்தனையோ சப்தங்கள் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன. நம் செவிகளுக்கு எட்டவில்லை. வானொலிப் பெட்டிகளுக்கு எட்டும்.

நிச்சலனம் என்றால் எல்லாச் சலனங்களும் நின்று விட்டன என்று அர்த்தமல்ல. இயற்கையில் சலனங்கள் இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கின்றன. நமக்குத் தெரியவில்லை.

பூமி சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. நமக்குத் தெரிவதில்லை.

பூமிக்குள் எத்தனையோ விதைகள் மெல்ல வளர்ந்துக் கொண்டிருக்கின்றன.

எத்தனையோ மொட்டுக்கள் மெல்ல மலர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆட்டத்தின் (atom) ஆட்டம் இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கிறது.

நமக்குத் தெரிவதில்லை.

இயக்கம், உறக்கம் இரண்டும் இயற்கையின் சுபாவம்.

ஆனால் அந்த இரண்டும் தனித்தனியாக நடப்பதில்லை.

அதாவது இயற்கை கொஞ்ச நேரம் இயங்குகிறது. அப்புறம் கொஞ்ச நேரம் உறங்குகிறது என்பதல்ல.

இந்த இரண்டும் ஏக காலத்தில் நடக்கின்றன.

இயற்கை ஓர் இயந்திரத்தைப் போல்
இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கும்
போதே, ஒரு சித்திரம் போல் உறங்கவும்
செய்கிறது.

என்று மோஸ்லே என்ற அறிஞர் கூறுகிறார்.

இது இயற்கையின் அதிசயம்.

உண்மையில் இயக்கம். உறக்கம் என இரண்டு இல்லை.

அப்படித் தெரிவது ஒரு மாயை.

இயக்கத்துக்குள் உறக்கம் உண்டு. உறக்கத்துக்குள் இயக்கம் உண்டு.

இன்னும் சரியாகச் சொல்வதானால், இயக்கமும் உறக்கம்; உறக்கமும் இயக்கம்.

இஸ்ஸாவின் ஹைகூ இது:

நான் உறங்குகிறேன்
மலை நீரை
மாவிடிக்க வைத்துக் கொண்டு

இஸ்ஸாவின் மாவரைக்கும் இயந்திரம் மலையிலிருந்து இறங்கிவரும் நீரால் இயங்குகிறது.

ஆனால் இஸ்ஸா தானே மாவரைப்பதாகக் கூறுகிறார்; அதாவது மலை நீரின் மூலமாக.

இஸ்ஸா தன்னையும் இயற்கையின் ஒரு பகுதியாக … அல்ல அல்ல இயற்கையாகவே கருதுகிறார்.

இஸ்ஸாவும் இயற்கை. மலை நீரும் இயற்கை.

இயற்கையே இஸ்ஸாவாக உறங்குகிறது; மலை நீராக மாவரைக்கிறது. ஒரே நேரத்தில்.

என்ன ஓர் அற்புதமான தரிசனம்!

வைணவம் இறைவனைப் பள்ளிகொண்டவனாக அதாவது உறங்குகிறவனாக காண்கிறது.

சைவம் இறைவனை நடராசனாக – எப்போதும் ஆடிக் கொண்டிருப்பவனாகக் காண்கிறது.

இரண்டும் வெவ்வேறல்ல. ஒன்றுதான்.

பம்பரம் நன்றாக வேகமாகச் சுழன்றால் சுழல்வது தெரியாது. பேச்சு வழக்கில் அதை ‘உறங்குகிறது’ என்றுதான் சொல்லுவார்கள்.

அடடா! எவ்வளவு பெரிய விஷயம் இதில் வெளிப்படுகிறது.!

சரியான வேகமான இயக்கம் உறக்கமாகத் தெரிகிறது !

ஞானம் பெறுவதற்கு ‘அம்பர’த்தைப் பார்க்க வேண்டியதில்லை. பம்பரத்தைப் பார்த்தால் போதும். அதோ! தாயுமானவரின் பாடல் கேட்கிறது.

சாட்டையில் பம்பர சாலம் போல் எல்லாம்
ஆட்டுவான் இறை

அண்ட சராசரங்கள் எல்லாமே பம்பரங்களே; நாமும்தான்.

இறைவன் ஆடும் பம்பரங்கள். சாட்டையில்லாமல் ஆட்டும் பம்பரங்கள்.
- ‘இது சிறகுகளின் நேரம்’ (முற்பகுதி) தொகுப்பிலிருந்து

விலைமாதர்

woman

கவிக்கோ அப்துல் ரகுமான் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில். தன்னுடைய மாணவர்களுடன் கலந்துரையாடலில் மாணவர்களிடையே ஒரு போட்டி வைத்தாராம். அதாவது ஒரு விலைமாதுவின் சமாதியில் ஒரு வாசகம் எழுதவேண்டும். என்ன வாசகம் எழுதலாம் என்று போட்டி வைத்தார்.

முதலாம்  மாணவன்
பால்வினை நோய் விருட்சம்

இரண்டாம் மாணவன்
சுக கிடங்கின் நித்திரை

மூன்றாம் மாணவன்
வாடகை மனைவியின் உறக்கம்

இறுதியான ஒரு மாணவன் சொன்னான்
இன்றுதான் இவள் தனியாக தூங்குகிறாள்.

பரிசு பெற்ற வாசகம் இதுதான்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்

karunanidhi2

வெற்றி பல கண்டு நான்

விருது பெற வரும்போது

வெகுமானம் என்ன

வேண்டும் எனக் கேட்டால்

அப்துல்

ரகுமானைத் தருகவென்பேன்

- டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி