Latest Entries »


என் கவிதை உனக்கு பூச்சொரியும்:
… ஏனெனில் நீ எனக்கு ஆச்சரியம்.

முதுகு வலிக்கிறது உனக்கு..
வலிக்காதா…

எத்தனை காலம்தான்
எங்களை சுமக்கிறாய்.

ஒரு நாள்
தமிழிடம் முகவரி கேட்டேன் -
அது மே/பா மு.கருணாநிதி என்றது.

இரட்டை இலை விரித்து
நாட்டையே உண்டவர்களை
எச்சில் இலையாக்கி
குப்பைத் தொட்டியில்
எறிந்தாய் நீ.

நட்சத்திர ஆட்சியை
இனி இந்த நாடு தாங்காது.

சில நட்சத்திரங்கள்
நாட்டை ஆள ஆசைப்படுகிறது…

தமிழா விழித்துக் கொள்…

வெள்ளித் திரை ஆட்சிக்காக
உன் வேட்டியும் உருவப்படாலாம்….
- கவிக்கோ

 

என் ஆசான் கவிக்கோவே!

உனக்கு பிடித்ததெல்லாம்
எனக்கு பிடிக்காமல் போனது
ஏனென்று தெரியவில்லை.

சிலதுகள் மட்டும் பிடிக்கும்.

அவர் தலையில் நீ பனிக்கட்டி வைக்கையில்
எனக்கு ஜலதோஷம் பிடிக்கும்.

உன் உவமைக் கவிதையை படிக்கையில் – எனக்கு
தமிழ்ப் பைத்தியமே பிடிக்கும்.

இருந்தும்
உனக்கு பிடித்ததெல்லாம்
எனக்கு பிடிக்காமல் போனது
ஏனென்று தெரியவில்லை.

- அப்துல் கையூம்

5 ஆண்டுக்கொருமுறை தேர்தல் வரும்போது சிரித்த முகத்தோடு, கும்பிட்ட கைகளோடு தொகுதிக்கு வலம் வந்து வாக்காளர்களை குசலம் விசாரிக்கும் வேட்பாளர்களை தோலுரித்துக் காட்டுகிறார் கவிக்கோ

ஐந்தாண்டுக்கு ஒரு முறை
சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையோடு
குருட்டு தமயந்தி.

நன்றி : பால்வீதி நூலிலிருந்து

 

கண்ணகியின் கதையைச் சொல்ல தலையணை சைஸில் நூல் தேவைப்பட்டது இளங்கோவடிகளுக்கு. அதன் சாரம்சத்தை ஒரு சில வரிகளிலேயே சொல்லி முடித்து விட்டார் கவிக்கோ அவர்கள்.

“பால் நகையாள்
வெண்முத்துப் பல் நகையாள்
கண்ணகியாள் கால் நகையால்
வாய் நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை “.

அருஞ்சொற்பொருள் :

பால் நகையாள் = பால் உணர்ச்சி தோன்றுகிற மாதிரி சிரிக்காதவள்
வெண்முத்துப் பல் நகையாள் = முத்துப் போன்ற பற்களை உடையவள்
கால் நகையால் =  காற் சிலம்பினால்;
வாய் நகை போய் = புன்னகை மறைந்துப்போய் 
கழுத்து நகை = மாங்கல்யம் (தாலி)

சிலம்புக் கதையை சொல்ல வந்த கவிக்கோ, நகை என்ற வார்த்தையை வைத்து சொற்சிலம்பம் ஆடியிருப்பது அவரது கவித்திறனைக் காட்டுகிறது        

இதைப்போலவே கம்பன் கழகத்தில் நடந்த ஒரு கவியரங்கில் கைகேயிக்காக கவிதை பாடினார் கவிக்கோ.

“கூனி இவளை வளைக்க
வரங்களுக்காக
நாணை இழுத்தாள்.
அது
அவள் மங்கள நாணையே
வாங்கிக்கொண்டது”

இந்த சொல் விளையாட்டு கவிக்கோவிற்கு கைவந்தக் கலை.

அம்பலம்

‘பித்தன்’ ‘பித்தன்’ என்ற
கூச்சல்களையும்
கற்களையும்
அவன் மீது
எறிந்துகொண்டிருந்தார்கள்.

அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
அவன் காயங்களும்
சிரித்துக்கொண்டிருந்தன.

அப்படித்தான் அவனை
முதன் முதலாகப் பார்த்தேன்.

நீ பித்தனா? என்று கேட்டேன்.
நீ கல்லா? என்றான்.

நான் காயப்பட்டேன்.

நீ எப்படிப்
பித்தன் ஆனாய்? என்றேன்.

ஒருமுறை தற்செயலாய்
உண்மையைப்
பின் பக்கமாய்ப்
பார்த்துவிட்டேன்.

அப்போது
சகல இரவுகளுக்குமான
சூரியோதயம் நடந்தது.

திரைகள் விலகின.

எதிர்ப்பதங்கள்
கைகோத்து
நடனமாடக்கண்டேன்.

முரண்கள்
முகமூடியைக் கழற்றிவிட்டு
முத்தமிடக் கண்டேன்.

காலமும் இடமும் மறைய
எல்லாம்
ஒன்றாவதைக் கண்டேன்.

உண்டும் இல்லையும்
அர்த்தம் இழந்தன.

அந்தத் தருணத்தில்
அறிவுச் சிறையிலிருந்து
நான் விடுதலை ஆனேன்.
என்றான்.

அவர்கள் ஏன் உன்மீது
கல்லெறிகிறார்கள்? என்றேன்.
நான் அவர்களுடைய
அந்தரங்கத்தின் கண்ணாடி.
அதனால்தான் என்னை
உடைக்கப் பார்க்கிறார்கள் என்றான்.

ஏன்?என்றேன்.

அவர்கள்
வெளிப்படுவதற்கு
பயப்படுகிறார்கள்.

அவர்கள்
வேடங்களில்
வசிக்கிறார்கள்.

அது அவர்களுக்கு
வசதியாக இருக்கிறது.

வேடம் கலைந்தால்
மேடை போய்விடும்.

நான் அவர்களுடைய
அம்பலம்.

கவனி!
அம்பலம்
என் மேடையல்ல.
நடனம்.

அதனால்தான் என்னைப்
பித்தன் என்கிறார்கள் என்றான்.
நான் உடைந்தேன்.

காலம் காலமாய்த்
திரண்டிருந்த சீழ்
வடிந்தது.
(கவிக்கோ அப்துல் ரகுமானின் “பித்தன்” கவிதைத் தொகுப்பிலிருந்து)

 [சமவுரிமை மாத இதழில் கவிக்கோ அப்துல் ரஹ்மான்] 

சகோதரா!
எப்படி இருந்த நீ
எப்படி ஆகிவிட்டாய்!

பிறைச் சின்னத்தைத்
தேர்தெடுத்தவனே!
பிறையாகவே
உறைந்து போனாயே!

ஒரு காலத்தில்
நீ முழு நிலவாக இருந்தாய்
உன் ஏகத்துவ ஒளி
இரவுகளை யெல்லாம்
மதம் மாற்றியது

இருண்டு கிடந்த
ஐரோப்பாக் கண்டத்திற்கே
ஒளியைக் கற்றுக் கொடுத்த நீ
அணைந்து போன விளக்காய்க்
கிடக்கிறாய்

மனித மலர்களைச்
சகோதரத்துவத்தால்
மாலையாக்கிய நீ
சமுதாய மாலையைப்
பிய்த்தெறியும்
குரங்காகிவிட்டாய்

ஒன்றாக இருக்க வேண்டிய நீ
பிரிந்து
அல்லாஹ்வின் கயிற்றிலே
‘டக்-ஆஃப்-வார்’
விளையாடிக் கொண்டிருக்கிறாய்

நீ நூல் பல கற்ற போது
நூலால் உயரும் பட்டம் போல்
உயர்ந்து கொண்டே சென்றாய்
உயர்த்திய நூலை
உலகியல் என்று அறுத்தாய்
விழுந்துக்கொண்டேயிருக்கிறாய்

மறுமைக் கல்வி
கற்றால் போதும்
இம்மைக் கல்வி
தேவையில்லை என்று
இம்மையை ஒதுக்கினாய்
இம்மை
உன்னை ஒதுக்கி விட்டது
மறுமையின் மகசூலுக்கு
விதைக்கத்தானே இம்மை
விதைப்பதைப்
புறக்கணிப்பவனே!
மறுமையில்
எதை அறுவடை செய்வாய்?

இந்த உலகத்தை
வீணாகவா படைத்தான்
இறைவன்?

நீ வசிக்கும்
பாலை வனங்களில்
மேலே வறட்சியை வைத்து
இறைவன்
கீழே
செல்வ சமுத்திரத்தை வைத்தான்
வறுமையோடிருந்த போது
தூய்மையாக இருந்த நீ
வளமடைந்தபோது
அழுக்காகிவிட்டாய்

உன் மண்ணெண்ணெயால்
பகைவர்களின் வயிறு
எரிந்தது
அதனால் இப்போது
உன் நாடுகள்
எரிந்துக் கொண்டிருக்கின்றன

இதிலே கொடுமை
உன் பகைவரின் தீப்பந்தத்திற்கு
நீயே எண்ணெய்
ஊற்றிக் கொண்டிருக்கிறாய்

சாதியற்ற சமுதாயத்தைப்
படைத்தது இஸ்லாம்
நீயோ
இனவுணர்வுக் குட்ட நோயால்
அழுகிக்கொண்டிருக்கிறாய்

உலகெங்கும்
சாந்தியைப் பரப்ப வேண்டிய நீ
‘பயங்கரவாதி’ என்ற
கெட்டப் பெயரை
வாங்கிக் கொண்டு நிற்கிறாய்

‘முஸ்லிம்’ என்ற
‘லேபிள்’ மட்டும் ஒட்டிய
சீஸாவாக இருக்கிறாய்
உள்ளேயோ
சாக்கடையை
நிரப்பிவைத்திருக்கிறாய்
அப்பாவி மக்களைக் கொள்வது
‘ஜிஹாத்’ என்று
உனக்கு
மூளைச் சலவை செய்தவர்கள்
அகாரணமாய்

மனிதன் ஒருவனைக் கொல்வது
மனித குலத்தையே
கொல்வதாகும் என்ற
இறைவசனத்தை
உனக்குப் போதிக்கவில்லையா?

வேகம் இருக்குமளவு
உனக்கு
விவேகம் இல்லை

முன் யோசனை இல்லாமல்
இரண்டு கோபுரங்களைத்
தகர்த்தாய்
அவனோ உன்னுடைய
இரண்டு நாடுகளை
நாசமாக்கிவிட்டான்

மார்க்கத்தின்
உயிரை விட்டுவிட்டு
உடலைக்
கொண்டாடிக் கொண்டிருக்கிறாய்

வீட்டுக்கு வெளியே
வெள்ளையடிப்பதிலேயே
கவனம் செலுத்தும் நீ
வீட்டுக்குள்ளே கிடக்கும்
குப்பையைப் பற்றிக்
கவலைப்படாமல் இருக்கிறாய்

தாடி வளர்ப்பதில்
நீகாட்டும் அக்கரையில்
கோடியில் ஒரு பங்கு
‘தக்வா’ வை வளர்ப்பதில்
காட்டியிருந்தால்
நீ வளர்ந்திருப்பாய்

தலைக்கு மேலே வைப்பதற்கு
நீ காட்டும் சிரத்தையில்
ஆயிரத்தில் ஒரு பங்கு தலைக்கு
உள்ளே வைப்பதில்
நீ காட்டியிருந்தால்
பகைவருக்கு முன்னால்
உன்தலை
குனியும் நிலை
ஏற்பட்டிருக்காது

லுங்கியைக்
கணுக்காலுக்கு மேலே
உயர்த்துவதில்
நீ காட்டும் கவனத்தில்
நூற்றில் ஒரு பங்கு
உன் உள்ளத்தில்
‘நஜீஸ்’ ஒட்டாமல் இருக்கிறதா
என்று பார்ப்பதில் இருந்திருந்தால்
நீ இறைவனை
நெருங்கியிருப்பாய்

உன் பகைவர்கள்
உன் கண்ணில்
விரலை விட்டு
ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்
நீயோ
அத்தஹிய்யாத்தில்
விரலை ஆட்டுவதா
நீட்டுவதா என்று
சர்ச்சையிட்டுச்
சண்டைபோட்டுக்
கொண்டிருக்கிறாய்

அந்த விரல் உணர்த்தும்
ஏகத்துவத்திற்கு
முக்கியத்துவம் தருவதை விட்டு
விரலுக்கு முக்கியத்துவம்
தருபவனே!
அந்த விரல் இல்லாதவன்
தொழுதால் கூடுமா?
இல்லையா?

சமூகத்தில் தொழுவதே
கொஞ்சம் பேர்கள் தாம்
அவர்களையும் நீ
குழப்பிக் கொண்டிருக்கிறாய்

பெண்கள்
முழுக்க மறைக்கும்
முக்காடு போடவேண்டும்
என்பவனே!
அவர்களில் பலருக்கும்
மாற்றாடை இல்லை என்பதை
நீ அறிவாயா?
அவர்கள் ஆடையின் கிழிசலில்
உன் மார்க்கமும் கிழிந்திருக்கிறது
என்பதை உணர்வாயா…?

கஜல் கவிதை

கஜல் ஓர் அறிமுகம்.

‘கஜல்’ அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.
‘கஜல்’ என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள். கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை. ‘கஜல்’ இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

- அப்துல் ரகுமான்.

அப்துல் ரகுமான், கஜல் எனும் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். ஆனால்,உருதுவில் ‘மிர்சாகாலிப்’ தான். கஜல் என்றாலே அதில் ‘மிர்சாகாலிப்’பின் வாசம் வீசும்.’ என்கிற அளவுக்கு அதில் அவர் சிறந்த கவிஞர். அவரின் கஜல் ஒன்று…

காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு
வினோதமான நெருப்பு!
பற்றவைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது!

- மிர்சாகாலிப்

அப்துல் ரகுமானின் கஜல் துளிகள் சில…

நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்

*******

என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?

*********

உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.

*******

மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது

************

என் கனவு
உன்முன் ஏந்திய
பிச்சை பாத்திரம்

*******

உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னைப் பார்த்தேன்.

- அப்துல் ரகுமான்.

நன்றி : குடந்தை அன்புமணி

மாண்புமிகு மனிதர்கள்

கவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது

தொடக்கம் உன் பெயரால்
தொடர்வதெல்லாம் உன் அருளால்
அடக்கம் நீ என் நெஞ்சில்
அடங்காத பேரொளியே
முதல்வா உன்னை என்
முதலாகக் கொண்டதால்
என் வாழ்க்கை வணிகத்தில்
இழப்பே இல்லை

தாள் கண்டால் குனிந்து
தலை வணங்கும் பேனா
உன் தாள் பணியும்
உபதேசம் பெற்ற பின்னர்
எழுத்தல்ல இறைவா
இவையெல்லாம்
என் எழுதுகோல் செய்த
‘சஜ்தாவின்’ சுவடுகள்
(சஜ்தா – சிரம் பணிதல்)

உன் பெயரில் ஊற்றெடுத்து
ஓடுகிறேன் நதியாக
கலப்புக்கும் நீயே
கடலாகி நில்
எண்ணுவது உன்னையே
எழுதுவது உன்னையே
உண்ணுவது உன்னையே
உயிர்ப்பதும் உன்னையே
என்னை உன் கையில்
எழுதுகோலாய் ஏந்தி
நின்னையே நீ எழுதிக்கொள்

நாமோ
பாவலர் உமரின்
பரம்பரையில் வந்தவர்கள்
சேகுனாப் புலவரின்
செல்லக் குழந்தைகள்
பீரப்பாவின் பேரப்பிள்ளைகள்
காசிம் புலவரின்
கால்வழித் தோன்றல்கள்
வண்ணக் களஞ்சிய
வாரிசானவர்
குலாம் காதிரின்
குலக் கொழுந்துகள்
செய்குத் தம்பியின்
சின்னத் தம்பிகள்
ரகுமான் என்றால்
இது என்ன ரக மான் என்பார்
பொய்மான் பின்னால்
போனவன் அல்ல
நான் ‘ஈமான்’ பின்னால்
ஏகும் ரகுமான்

இதுவரை ஒட்டடை அடிக்கக்
கோல் ஏந்தினோம்
இன்றோ நான்
ஓர் ஒட்டடையை புகழக்
கோல் ஏந்தினேன்
அன்றொரு நாள் என் வீட்டில்
ஒட்டடை அடிக்கக் கோலெடுத்து நின்றேன்
மூலையில் ஒரு சிலந்தி வலை
அடடா என்ன அழகு
கவிதை மனம் அந்த வலையில்
சிக்கிக் கொண்டது
அழகும் ஒரு வலைதான் – அதனால் தான்
நாமெல்லாம் அகப்பட்டு
கொள்கிறோம் அதற்குள்ளே

உலகத்தை பார்க்கிறேன்
எத்தனை சிலந்திகள்
இதோ இரவு
கறுப்பு இழைகளால் வலை பின்னுகிறது
வலையில் சிக்கித் துடிக்கின்றன
நட்சத்திர ஈக்கள்

இதோ
இருட்டில் ஒருத்தி
ஒப்பனையால் வலை விரித்து
இரைக்காகக் காத்திருக்கிறாள்
பாவம் தானே இரையாகிறாள்
அதோ சூரியன்
கிரணங்களால் வலை பின்னுகிறான்
இருளைப் பிடித்து
உண்பதற்கு

அதோ அரசியல் மேடையில் ஒருவன்
வார்த்தைகளால் வலை பின்னுகிறான்
எதிரே அப்பாவி இரைகள்
பிரபஞ்ச வலையைப் பின்னிவிட்டு
மறைந்து உட்கார்ந்திருக்கிறானே
அவனும் ஒரு சிலந்தி தான்
அவனுடைய இரை நாம் தான்
அவனே படைத்து
அவனே உண்ணும் வரை

எழுதுகோல் ஏந்துகிறவன் நான்
ஒட்டடைக் கோல் ஏந்தியபோதும்
ஊறியது கற்பனை
சிலந்தி வலை பின்ன
சிலந்தியைப் பற்றி நான்
சிந்தனை வலை பின்னி நின்றேன்

அற்பப் பிராணியா சிலந்தி இல்லை
அற்புதப் பிராணி நம்முடைய
வீட்டுக்குள் வீடு கட்டும்
விந்தைப் பிராணி
இதற்குத்தான் எவ்வளவு தன்மானம்
நம்மைப் போல்
அந்நியப் பொருள்களால் வீடு கட்டாமல்
தன் சொந்தப் பொருளாலல்லவா
வீடு கட்டுகிறது
வாயால் ஆகாயக் கோட்டைகளை
கட்டும் மனிதர்களை விட
இச்சிலந்தி உயர்ந்தது
இதுவும் வாயால்தான் கட்டுகிறது
ஆனால் உண்மையாகவே
ஒரு வீட்டைக் கட்டிவிடுகிறது

உணவு, உடை, உறையுள்
இந்த மூன்றையும்
மனிதன் தனித்தனியாக
தேட வேண்டியிருக்கிறது
சிலந்திக்குத்தான்
எத்தனை சாமர்த்தியம்
நூலாலேயே ஒரு
வீடு கட்டிவிடுகிறது அந்த
வீட்டாலேயே உணவையும்
பெற்று விடுகிறது

இந்தச் சிலந்தி
வாயால் பூ வரையும்
ஓவியனா இல்லை
சுவருக்கே ஆடை கட்டும்
பைத்தியமா?
சிலந்திக்கு மட்டும் என்ன
இவ்வளவு அழகிய வாந்தி
எவ்வளவு நூல் நூற்றாலும்
இப்பஞ்சு குறைவதே இல்லை

எங்கள் இதயம்
இரண்டு குகைகளை மறந்து விடாது
ஒன்று ‘ஹிரா’
வெளிச்சம் பிரசவமான விடுதி
மற்றொன்று ‘தௌர்’
அந்த வெளிச்ச தீபம்
அணைந்து விடாமல்
காப்பாற்றிய கல் சிம்னி

‘தௌர்’ குகையே
கல் கூடாரமே
சரித்திரத்தில் எத்தனையோ
தங்குமிடங்களைப் பார்த்திருக்கிறோம்
ஆனால்
சரித்திரத்தில் தங்கிவிட்ட
தங்குமிடம் நீ மட்டும்தான்

‘தௌர்’ குகையே
கல் வாயே
அன்று எவ்வளவு பெரிய ரகசியத்தை
நீ மறைத்து வைத்திருந்தாய்
எங்கே நீ உளறி விடுவாயோ
என்று பயந்துதான்
சிலந்தி உன் உதடுகளைத் தைத்ததோ

சிலந்தியே
இரையைப் பிடிப்பதற்குத்தான்
நீ வலை பின்னுவாய்
ஆனால் அன்று
மக்க நகரத்து
மிருகங்களின் இரையைக்
காப்பாற்றுவதற்கல்லவா
நீ வலை பின்னினாய்

உலகத்தின் ஒட்டடைகளை
அழிக்க வந்த இஸ்லாத்தில்
சிலந்தியே நீ அன்று கட்டிய
வலையை மட்டும்
நாங்கள் அழிக்க விரும்பவில்லை
ஏனென்றால்
ஒட்டடைக் கோலையே காப்பாற்றிய வலை
உன் வலை தான்

மீன் பிடிப்பதற்காக வலை விரிப்பார்கள்
ஆனால் நீயோ ஒரு மீன்
எங்கள் மீன் அல் அமீன்
தப்புவதற்கல்லவா வலை விரித்தாய்
சிலந்தியே அன்று மட்டும்
உன் வலை கொசுவலையாக இருந்தது
சித்தம் மகிழும் செம்மல் நபியின்
ரத்தம் குடிக்க வந்த
குரைஷிக் கொசுக்களை
அண்டாமல் விரட்டியதால்

அகமது நபியின்
ஆள் மயக்கும் அழகு கண்டால்
அகம் அது மயங்கும்
முகமது நபியின்
முத்து நிலா முகம் கண்டால்
மூ உலகும் தான் மயங்கும் என்று
அவர் முகமது மறைக்க
ஒரு முத்திரை போட்டாயோ

நிர்வாண உலகத்திற்கு
ஆடையாய் வந்தவரைப் பாராட்ட
பொன்னாடை நெய்து
போர்த்தினாயோ இல்லை
குபுரியத்திற்கு (குபுரியம் – இறை மறுப்பு)
கபன் நெய்யத் தொடங்கினாய்
(கபன் – இறந்த உடலை மூடும் தையலில்லாத வெண்ணிற ஆடை)
இறைவன் தந்த நூல் மறை நூல்
உன் நூலோ மறை கொணர்ந்த
தூதரை மறைத்த நூல்
அன்று உன் மறை நூலால்
இறைவனின் மறை நூலையே
காப்பாற்றிவிட்டாய்

இறைவா
வீடுகளிலேயே
பலவீனமான வீடு
சிலந்தியின் வீடுதான் என்று
உன் திருமறையில் கூறினாய்
ஆனால் என்ன அதிசயம்
அந்த பலவீனமான வீடு
எவ்வளவு பலமான
கோட்டையை கட்டிவிட்டது

இறைவா நீ நினைத்தால்
ஒரு மேலாம் படையைக் கூட
ஒரு நூலாம் படையால்
தடுத்து நிறுத்தி  விடுகிறாய்
சிலந்திகள்
ஒட்டடைக் கோலால் அழியும்
நீயோ ஓர் ஒட்டடைக் கோலை
காப்பாற்றிய சிலந்தி
இருண்ட மூலைகளில்
வலை பின்னியிருந்த
மூடச் சிலந்திகளை
ஒழிக்க வந்த ஒட்டடைக் கோல்
உன்னாலல்லவா அன்றி காப்பாற்றப்பட்டது

இதோ
என் வாயும் ஒரு சிலந்திதான்
வார்த்தைகளால் கவிவலை பின்னுவதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அது மாநபியை மறைப்பதற்காக
வலை பின்னியது
இது வேத நபியை வெளிப்படுத்துவதற்காக
வலை பின்னுகிறது

என் இதயமும் ஒரு தௌர் குகைதான்
அங்கே ஏந்தல் நபி எழுந்தருளி இருப்பதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அந்தக் குகை அவர்களை வெளியே விட்டது
இந்தக் குகையோ அவர்களை வெளியில் விடாது
இறைவா
அந்தச் சிலந்தியாய் என்னைப்
பிறக்க வைத்திருக்கக் கூடாதா?
இந்த மனிதப் பிறவியை விட
மகத்துவம் பெற்றிருப்பேனே
என் கவிதைகளை நாடு புகழ்கிறது
ஆனால்
என் கவிதைகளை விட
அந்தச் சிலந்தி வலை உயர்ந்ததல்லவா

புனிதமான சிலந்தியே
இதோ என் இதய வீட்டில்
நன்றிக் கண்ணீராலேயே
ஒரு வலை பின்னிக் கொடுக்கிறேன்
நீ இங்கே நிரந்தரமாகவே தங்கிவிடு

- கவிக்கோ அப்துல் ரஹ்மான்

Kavikko

நபிகள் பெருமான் -
இல்லாமல் வாடிய
ஏழை உலகம்,
கேட்காமலேயே
கிடைத்த அருட்கொடை !
தட்டாமலேயே
திறந்த கதவு !
தேடாமலேயே
தெரிந்த மூலிகை !

இளமையில் பெற்றோரை
இழந்த இவ்வனாதைதான்
உலகுக்கே தாயாகி
ஊட்டி வளர்த்தவர் !

படிக்கத் தெரியாத – இந்தப்
பாமர நபியிடம்தான்
பள்ளிக் கூடங்களும்
பாடம் பயின்றன
இல்லை ..
பல்கலைக் கழகங்களே
பாடம் பயின்றன !

கந்தல் அணிந்த – இந்தக்
கருணைநபி கையால்தான்
அம்மண உலகம்
ஆடையைப் பெற்றது !

பாலையில் முளைத்த – இந்த
பசுமர நிழலில்தான்
வெயிலும்கூட
இளைப்பாற வந்தது !

இந்த ஏழையை
ஈன்ற பின்னரே
கிடக்காத புதையல்
கிடைத்தது போன்று
இந்த உலகம்
இறுமாப் படைந்தது !

மண்ணில் – இந்த
மணிவிளக்கைக்
கண்டபின்தான்
விண்ணும்தன் சுடர்களுக்காய்
வெட்கம் கொண்டது !

வல்லூறுகளும் – இவர்
வலைக்குள் குடிபுகுந்து
வெள்ளைப் புறாக்களாய்
விண்ணெங்கும் பறந்தன !

உயர்மறை மகுடி – இவர்
ஊதியத்கைக் கேட்டவுடன்
நாகத்தின் பற்களிலும்
நல்லமுதம் ஊறியது !

தனித்தனி சாதி
அறைகளில் கிடந்த
மனித எழுத்துக்களை
ஒரே வாக்கியமாக
அச்சுக் கோர்த்து
சகோதரத்துவ
சமுதாயம் கண்டவர் !

பாட்டால் புகழைப்
பலர் பெறுவர் – ஆனால்
பரமனின் நபியைப்
பாடுவதால் நமது
பாட்டுக்கல்லவா
பெரும்புகழ் கிடைக்கும்

அன்று – அந்தத்
தாயிப் நகரில்
தாஹா நபிகள் !

தாயிப் வாசிகளே !
விந்தை மனிதர் நீர்!
கல்லின் மீதுதான்
பூவைத் தூவுவீர்

ஆனால் அன்று
(பூமான் நபியெனும்)
பூவின் மீதல்லவா
கல்லைச் சொரிந்தீர் !

வெல்வதாக நினைத்தீர் !
ஆனால் – தோற்றவர் நீங்களே !
நீங்கள் வணங்கும்
கற்களை அல்லவா
கருணைநபி காலடியில்
மண்டியிட வைத்தீர் !

உங்கள் கற்கள்
ஏற்படுத்தியவை காயங்கள் அல்ல !
பொறுமைக்குக் கிடைத்த
இரத்தினப் பதக்கங்கள் !
இறை சோதனையின்
குங்கும முத்தங்கள் !

பொய்மையை எதிர்த்த
வாய்மைத் தூதருக்கு
ரணங்கள் தானே
ஆபரணங்கள் !

அதோ பாருங்கள் !
நீங்கள் எறிந்த கற்கள்
பச்சை ரத்தம்
படிந்து கிடப்பதை !
காயங்கள் செய்த
பிரச்சாரத்திற்குரிய
பெரிய வெற்றி !
அவை கூட
மதம் மாறி விட்டன !

தாயிப் வாசிகளே !
கனிமரம் என்பதால்
கல்லெறிந்தீரோ?
கல்லடி பட்டால்
கனி மட்டுமா உதிரும்?
காய்கூட உதிருமே !

ஆனால்
கல்லடிக்குக்
கனிமட்டும் உதிர்ந்த
கருணை மரத்தை
வேறு எங்கேனும்
கண்டவருண்டோ?

எங்கள் பெருமான்
காயம்பட்டதோ
அன்றொருநாள் !
ஆனால் இரத்தமோ
இன்றுமல்லவா வழிகிறது
எங்களின்
எழுதுகோல் வழியே !
[1978, நவம்பர் 14-ஆம் நாள் காயல்பட்டினத்தில் நிகழ்ந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில் கவிக்கோ தலைமையில் நடந்த இஸ்லாமியக் கவியரங்கில் அவர் பாடிய தலைமைக் கவிதையின் ஒரு பகுதி]

Kalingar

கவிக்கோவைப் பற்றி கலைஞர்

“பாரதிக்கு தாசன்
பாரதி தாசனென்றால் – அந்தத்
தாசர்க்குத் தாசர் இவர்
தமிழ்க் கவிதை பாடுவதில்
குடமிட்ட தீபமிவர் – இனிமேல்
குன்றிலிட்ட விளக்காவார் !
புடமிட்ட தங்கமிவர் – இனிமேல்
புகழ் மீட்டும் வீணையிவர் !”

மு. கருணாநிதி

கவிஞர் வாலி

vaaliசினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கும். அதை தீர்மானிப்பவன் இறைவன்தான். ‘உனக்கு பாட்டு எழுத வராது; ஊரில் நிலம் இருந்தா போயி விவசாயம் பண்ணு’ என்று என்னை விரட்டியவர் எம்.எஸ்.விசுவநாதன். பிறகு அவர் இசையில் 3 ஆயிரம் பாடல்களை எழுதினேன்.

‘சந்திரலேகா’ படத்தில் ராஜாவின் செருப்பை எடுத்து வைக்கும் வேலையாள் வேடம் கூட மறுக்கப்பட்ட சிவாஜி கணேசன் பிற்காலத்தில் நடிகர் திலகமாக வளர்ந்தார். இப்படி சினிமாவில் ஜெயிக்க காலம் நேரம் கூடி வரவேண்டும்.

சில இயக்குனர்கள் நான் நினைத்தது வரவில்லை என்பார்கள். ஒரு இயக்குனர் ‘கன்னம்’ என்ற சொல்லுக்கு எளிமையான வார்த்தையாகப் போடுங்கள் என்றார். ‘கன்னம்’ என்பதே எளிமையானது தான் என்று சொல்லிப்பார்த்தேன். அவர் கேட்கவில்லை. கவிஞர் அப்துல்ரகுமானிடம் இதை கூறினேன். ‘கேட்டவன் கன்னத்தில் ஒன்று போட வேண்டியதுதானே’ என்றார்.

- விழாவொன்றில் கவிஞர் வாலி

ravana

ராவணனை எல்லோரும் வில்லனாகப் பார்க்கையில் கவிக்கோ அவர்களின் பார்வை சற்று வித்தியாசமாக இருந்தது.

இருகண் படைத்தவனே
இவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த நான்
என்ன செய்வேன்?

என்று சீதையைப் பார்த்து ராவணன் சொல்வதாக புனைந்த கவிதை அவரை பிற கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பித்தது.

Follow

Get every new post delivered to your Inbox.